Sunday 15 March 2015

சாதனை வேளாண் மாணவி !

பெங்களூரு வேளாண் பல்கலைக்கழக தேர்வில்
முதலிடம்: ஏழை விவசாயி மகள் 13 தங்க பதக்கங்கள்
வென்று சாதனை

Updated: Sun, 15 Mar 2015 11:08 | இரா.வினோத்





பெங்களூரு வேளாண் பல்கலைக்கழக இறுதித்
தேர்வில் ஏழை விவசாயி ஒருவரின் மகள் அதிக
மதிப்பெண்கள் பெற்று 13 தங்கப்
பதக்கங்களை வென்றுள்ளார்.
தனது வெற்றிக்கு பெற்றோரின்
உழைப்பே காரணம் என அந்த மாணவி மேடையில்
கண்ணீரோடு கூறிய காட்சி அனைவரையும்
நெகிழ வைத்தது.

கர்நாடக மாநிலம் தொட்டப்பள்ளாப்பூரைச் சேர்ந்த
நரசிம்ம மூர்த்தி, சிக்கதாயம்மா தம்பதியருக்கு 3
மகள்கள். மூத்த மகள் கீதா பெங்களூரு வேளாண்
பல்கலைக்கழகத்தில் இளங்கலை வேளாண்
மரபணு அறிவியல் இறுதி ஆண்டு படிக்கிறார்.
நரசிம்ம மூர்த்திக்கு சுமார் 1 ஏக்கர் புன்செய் நிலம்
உள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.9 ஆயிரம்
முதல் ரூ.11 வரை மட்டுமே வருமானம்
கிடைக்கிறது. வறுமையிலும் கஷ்டப்பட்டு தனது 3
மகள்களையும் சிறந்த கல்வி நிலையங்களில் படிக்க
வைத்து வருகிறார். இதற்காக நிலத்தின் மீது கடன்
வாங்கியுள்ளார்.
இந்நிலையில் பெங்களூரு வேளாண்
பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற
பட்டமளிப்பு விழாவில் நரசிம்ம
மூர்த்தி தனது குடும்பத்தினருடன்
கலந்துகொண்டார். அப்போது பல்கலைக்கழக
அளவிலான தேர்வில் பல்வேறு பாடங்களில் அதிக
மதிப்பெண்கள் பெற்றதற்காக கீதாவுக்கு 13
தங்கப்பதக்கங்கள் அறிவிக்கப்பட்டன.

இந்த
பல்கலைக்கழகத்தில்
ஒரே மாணவி இத்தனை பதக்கங்களைப்
பெறுவது இதுவே முதல்முறை என
கூறப்படுகிறது.
இந்தத் தகவலைக் கேட்டு மேடையேறிய கீதா 13
பதக்கங்களை பெற்றுக்கொண்டு தேம்பி அழுதார்.
பின்னர் மைக் அருகே சென்ற அவர், “இந்த
வெற்றிக்கு என்னுடைய தாய், தந்தையே காரணம்.
மிகவும் ஏழ்மையான சூழலிலும் என்னை படிக்க
வைத்தனர்” என பெருமிதமாக கூறினார்.
கீதா அழுததைப் பார்த்த அவரது பெற்றோரும்
ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.


விவசாயிகளின் வலி அறிவேன்
13 தங்க பதக்கங்களைப் பெற்ற கீதா, 'தி இந்து'விடம்
கூறியதாவது:
வேளாண் பல்கலைக்கழகத்தின் வாசலை மிதிக்கும்
அளவுக்கு எனது குடும்பத்தில் வசதி இல்லை.
கல்லூரி கட்டணம், விடுதி கட்டணம், தேர்வு கட்டணம்
இன்ன பிற செலவுகள் அனைத்தையும்
எனது பெற்றோர் தினமும்
கூலி வேலைக்கு சென்றே செலுத்தினர். 2-ம்
ஆண்டு படிக்கும்போது கல்விக் கடன் கிடைத்ததால்
ஓரளவுக்கு சமாளிக்க முடிந்தது.
எனது பெற்றோரின் கஷ்டத்தையும், வலியையும்
நான் நன்கு அறிவேன். என்னையும்
எனது தங்கைகளையும் படிக்க வைக்க தினமும்
அவர்கள் படும்பாடு எனக்கு தெரியும்.
அதனை உணர்ந்து தினமும் பொறுப்பாக
படித்தேன். அதனால்தான் என்னால் இத்தனை தங்கப்
பதக்கங்கள் பெற முடிந்தது.
அடுத்தபடியாக வேளாண் மரபணு அறிவியல்,
தாவர கலப்பினம் பற்றி படிக்க இந்திய வேளாண்
கழகத்தின் உதவித் தொகை கிடைத்திருக்கிறது.
அதனைக் கொண்டு நன்றாக படித்து சிறந்த
வேளாண் விஞ்ஞானி ஆக வேண்டும்
என்பதே எனது லட்சியம். அதற்காக தினமும்
கடுமையாக உழைக்க தயாராகி விட்டேன்.
ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்ததால்,
விவசாயிகள் வடிக்கும் கண்ணீர் எனக்கு தெரியும்.
தண்ணீர் பற்றாக்குறை, கடன் பிரச்சினை, உற்பத்திப்
பொருட்களுக்கு போதிய விலை இல்லாமை என
பல பிரச்சினைகளில் சிக்கி விவசாயிகள் தினமும்
மரணத்தோடு போராடுகின்றனர். அதிலும்
குறு விவசாயிகளின்
பிரச்சினையை வார்த்தைகளில்
சொல்லி மாளாது.
எனவே எதிர்காலத்தில் ஏழை எளிய விவசாயிகளின்
நலனுக்காகவும், அவர்களது குடும்பத்தின்
நலனுக்காகவும் தன்னார்வ தொண்டு நிறுவனம்
தொடங்க திட்டமிட்டுள்ளேன்.
விவசாயிகளை காப்பாற்றாவிடில் உலகம் ஒருநாள்
நிச்சயம் அழிந்துவிடும். விவசாயம் தான் நாட்டின்
முதுகெலும்பு என்பதை இன்றைய இளைஞர்கள்
உணர வேண்டும். பல்வேறு பிரச்சினைகளால்
விவசாயத்திலிருந்து விவசாயிகள்
விடுபடுவதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.



நன்றி: தி ஹிந்து தமிழ்



இவரை போல் நமது அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்புலத்திலும் யாரோ ஒருவர் இருக்கலாம் ............

அந்த ஒருவருக்கு வாழ்த்துகள் !

நமது வேளாண்புலத்தில் ஒருவர் மட்டும் சாதனை புரிந்தால் போதுமா ???

நிச்சயம் போதாது, ஒவ்வொவரும் சாதனை புரிய வேண்டும்.

முயற்சி செய்யுங்கள் !

நிச்சயம் முடியும் !

நாளை தேர்வுக்கு வாழ்த்துகள் !

No comments:

Post a Comment